Friday, September 19, 2025

வன்மமும் சாருவும்

 

அன்புள்ள சாரு..

யாருடனும் வன்மம் இல்லை என்ற உங்கள்  கட்டுரை தொடர்பாக 

சில விஷயங்கள் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது என்பதாலும் பழைய தலைமுறையினருக்கு மறதி அதிகம் என்பதாலும் சில விஷயங்களை நினைவுபடுத்த வேண்டியுள்ளது..


அப்போது ஜெயமோகனுடன் கடும் கருத்தியல் மோதல் நடந்து வந்த காலகட்டம். அப்போது நீங்கள் உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதி வந்தீர்கள் அடுத்து வெளிவரும்  இதழில் நான் கடவுள் படம் குறித்தும் ஜெயமோகனின் பங்களிப்பு குறித்தும் எழுதி இருப்பதாக ஒரு போஸ்ட் போட்டீர்கள்..
அவ்வளவுதான்.. இணையமே பற்றி எரிந்தது.. உயிர்மை வெப்சைட்டே திணறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். உயிர்மை போன்ற இதழ்கள் பெரும்பாலும் சந்தா மூலம் வாசகர்களை அடையும். வெகு சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். அந்த மாத இதழ் நான் வழக்கமாக வாங்கும் எங்கும் கிடைக்கவில்லை. என்னவோ தெரியலை சார்.. எல்லாம் வித்துப்போச்சு என்றார்கள்.. கடைசியில் கஷ்டப்பட்டு வாங்கிப்படித்தேன்.

அதைப் படித்தபோது இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா என்ற நெகிழ்ச்சியில் எப்படி கண்கள் கசிந்தனவோ அதேபோல இதை டைப் செய்யும்போதும் கண்கள் கசிகின்றன

அக்கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது 

”தமிழகமே கொண்டாடி வரும் பாலாவின் படங்களை இதுவரை நான் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவன். அதனால் இந்த முறை 'நான் கடவுள்' படத்தைப் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். பாலா மூன்று வருடம் உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்; அதற்கும் மேலாக எனக்குப் பிடிக்கவே பிடிக்காத இளைய ராஜாவும், ஜெயமோகனும் வேறு சேர்ந்திருக்கிறார்கள். அதனால் இந்த மூவர் கூட்டணி இருக்கும் பக்கமே திரும்ப வேண்டாம் என்று இருந்துவிட்டேன் எதற்குப் போக வேண்டும்: அப்புறம் திட்ட வேண்டும்.”

----அடுத்து சிலவரிகளில் இப்படி வருகிறது ...

ஐந்தே நிமிடம்தான்  தெரிந்து போயிற்று இது பாலாவின் வழக்கமான படம் இல்லை. ருத்ரன் (ஆர்யா) வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்ததுமே ஒரு உலகத்தரமான படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. அப்போதுதான் படத்தில் பிச்சைக்காரர்களும், குருடர்களும் உடல் ஊனமுற்றவர்களும். பைத்தியக்காரர்களும், குரூரமான விசித்திரமான உருவ அமைப்புகளோடு பிறந்தவர்களும் இடம் பெறும் காட்சிகள் துவங்குகின்றன.

ஜெயமோகன் குறித்து 

படத்தில் பாலாவுக்கு இணையாகப் பங்களிப்புச் செய்திருப்பவர்கள் என இரண்டு பேரைக் குறிப்பிடலாம். ஒருவர். ஆர்ட் டைரக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி: மற்றொருவர், ஜெய மோகன். இவர்கள் இருவருமே இலக்கியத் தொடர்பு உடையவர்கள் என்பதை இங்கே குறித்துக் கொள்ள வேண்டும் பாலா என்ன நினைத்தாரோ அதைப் பேசி இருக்கிறார் ஜெயமோகன் இதைப் பற்றித் தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றி ரசிப்பதற்கு ஜெயமோகனின் வசனம் பெரும்பங்கு வகிக்கிறது நரகத்தைப் பற்றிய குரூரமான காட்சிப் படிமங்களாக இருந்தாலும் படம் நெடுகிலும் ப்ளாக் ஹ்யூமர் என்று சொல்லப்படும் அவல நகைச்சுவை பார்வையாளரைப் படத்தின் உள்ளே இழுத்துக் கொண்டே செல்கிறது.

கடைசி வரி


உலகின் க்ளாஸிக்குகளில் ஒன்றை உருவாக்க முனைந்த பாலா என்ற கலைஞனுக்குத் தலை வணங்குகிறேன்.

பல படங்கள், நூல்களை ஆதாரம் காட்டி அப்படத்தின் சிறப்பை பட்டியல் இட்டு இருப்பீர்கள் 
இந்தக் கட்டுரை அப்போது ஏற்படுத்திய பிரமிப்பு மறக்கவே முடியாது.. அதை விட இன்னொன்று


சிலர் கேட்டார்கள் 

ஜெயமோகனை இவ்வளவு காலம் விமர்சித்துவிட்டு இப்போது அவரைப்பாராட்டுவது உங்களது தோல்வி இல்லையா?

அதற்கு நீங்க சொன்னீர்கள்

நான் அவரைத் திட்டவேண்டும் என நினைத்துதான் படத்துக்கே போனேன்..ஆனால் அவர் எழுத்து என்னை ஜெயித்து விட்டது,, அதற்கு நான் என்ன செய்ய முடியும்.. இப்படி என் கருத்தை பொய்யாக்கி தன் எழுத்து மூலம் என்னை வென்றால் எனக்கு சந்தோஷம் தான்.. நான் தோற்றனவாக்வே இருந்து விட்டுப்போகிறேன் என சொன்னீர்கள்


ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் துரியோதனன் வலிமையும் மாபெரும் உளவிரிவும் மிக்கவன். சிறுமை சற்றும் இல்லாதவன் அரசனல்லன் என்பதால் கர்ணன் அவமானத்துக்கு உள்ளாகும்போது அவனை நான் அரசனாக்குகிறேன் என் ஒரு பகுதி நிலத்துக்கு இனி அவனே அரசன் என்பான் பெரியோர் அதை ஒப்ப மாட்டார்கள்.. அப்படியெல்லாம் சுலபமாகக் கொடுக்க முடியாது ஓர் அரசனை வென்றுதான் அரசை அடைய முடியும்.. வாழ்நா:ள் முழுக்க அவனால் தோற்கடிக்கப்பட்டனாகவே இருக்க நேரும் என்பார்கள் துரியோதனன் சற்றும் தயங்க மாட்டான் சரி...அவனிடம் நான் தோற்றதாகவே இருக்கட்டும்.. நானும் என் பரம்பரையும் தோல்வியாளர்களாவே இருக்கிறோம்..அவனுக்கு முடிசூட்டுங்கள் என்பான் அக்காட்சியை படிக்கும்போது உங்கள் நினைவுதான் வந்தது ஜேஜே சில குறிப்புகள் வெளிவந்தபோது அந்த நாவல் அழிய வேண்டும் என நினைத்து இருந்தால்  கள்ள மவுனத்தோடு கடந்து சென்று இருக்கலாம். ஆனால் பணம் கஷ்டம் மிகுந்த அநத நாளில் மனைவியின் நகையை விற்று அதை விமர்சித்து நூல் வெளியிட்டீர்கள்..  உண்மையில் அது அந்த நூலுக்கு நல்லதுதான் செய்தது. பரவலான அறிமுகம் பெற்றது



அதன் பிறகு பழுப்பு நிறப்பக்கங்களில் சுந்தர ராமசாமியைப் பற்றி விரிவாக பதிவு செய்தது வேறு விஷயம் மேலே சொன்ன கட்டுரையில் பாலாவை அவ்வளவு உயர்த்திப்பேசிய நீங்கள் அவருடன் நல்லுறவு பேணி இருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்தால் நீங்கள் சாரு அல்லவே.. அடுத்த படங்களில் அவரை சாடத்தான் செய்தீர்கள்.

இப்படி பாரபட்சமின்றி படைப்பை மட்டுமே பார்த்து அதனால் இழப்புகளை மட்டுமே சந்தித்து இலக்கிய உலகுக்கு நன்மை மட்டுமே செய்யும் நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமையாக இருக்கிறது

Monday, June 30, 2025

பாட்டும் நானே.. பாவமும் நானே.. சர்ச்சையும் கண்ணதாசன் விளக்கமும்




தினமணி கதிர்  15.6.2025  இதழில் வெளியான துணுக்கு


'பாட்டும் நானே... பாவமும் நானே....'

..........

நடிகர் சிவாஜி கணேசனை வைத்து, `சிவலீலா' எனும் படத்தை பிரபல தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு தயாரித்தார். அது தொடரவில்லை. அதையே ‘திரு விளையாடல்' என்ற பெயரில் ஏ.பி.நாகராஜன் எடுத் தார். 'சிவலீலா' படத்துக்காக, கவி. கா.மு.ஷெரீப் எழு திய ‘பாட்டும் நானே.. பாவமும் நானே...' என்ற பாட லையும் ஏ.பி.நாகராஜனிடம் கொடுத்துவிட்டார். அந் தப் பாடல் திருவிளையாடல் படத்தில் இடம்பெற் றது. படம் வெளியானபோது, அந்தப் பாடல் கண் ணதாசன் எழுதியதாக, அவருக்குத் தெரியாமலேயே டைட்டிலில் வந்தது. இதனால் வருத்தப்பட்ட எம்.ஏ. வேணு, “என்ன இப்படி செய்துவிட்டீர்களே” என்று கேட்டார். பின்னர், படக் குழுவினர் கவி.கா.மு.ஷெ ரீப்பை நேரில் சந்தித்து நடந்த தவறுக்கு வருத்தம் தெரி வித்து, ஐந்தாயிரம் ரூபாயை கொடுத்தனர். ஆனால் ஷெரிப்போ, "நான் ஒருமுறை எழுதிய பாடலுக்கு ஒரு முறைதான் ஊதியம் வாங்குவேன். ஏற்கெனவே இந்தப் பாடலுக்கு முந்நூறு ரூபாய் வாங்கிவிட்டேன். எனது பாடலை மக்கள் ரசிக்கிறார்களே அதுவே போதும்” என்று கூறிவிட்டார்.


29.06.2025 இதழில் வெளியான மறுப்பு


விளக்கம்...


தினமணி கதிர் 15.6.2025 இதழில் வெளிவந் துள்ள துணுக்கில், 'திருவிளையாடல்' திரைப்ப டத்தில் இடம்பெற்ற 'பாட்டும் நானே.. பாவமும் நானே..பாடல் எழுதியவர் குறித்து வந்த தகவல்


தவறு. இந்தப் பாடல் எழுதப்பட்ட விதம் குறித்து கவி ஞர் கண்ணதாசன் அவர்கள் தனது 'கண்ணதாசன்' ஜூலை 1978 இதழில் 'முக்கியமான இரண்டு கேள் விகள்' என்று தலைப்பிட்டு குறிப்பிடுகிறார். இதில் வந்துள்ள விவரம்:


"எந்தப் பாட்டையும் தனியாக உட்கார்ந்து எழு திக் கொண்டு போய் கொடுத்ததாக வரலாறே கிடை யாது. நான் எப்போது எழுதினாலும், என்னைச் சுற்றி என் உதவியாளர் பஞ்சு அருணாசலம் உள் பட குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள். மேற் படி பாடலை நான் சொல்லச் சொல்ல இதை எழு திய ஏ.பி.நாகராஜனின் உதவியாளர் சம்பத் ஐயங் கார் உயிரோடு இருக்கிறார். கூட இருந்தவர் மேலா ளர் வைத்தியநாதன், இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன், அவரது உதவியாளர் புகழேந்தி, ஏ.பி. நாகராஜன் குடும்பத்தினர் எல்லோரும் உயிரோ டுதான் இருக்கிறார்கள் (1978-இல்)" என்று கவி ஞர் கூறியிருக்கிறார். எனவே, கதிரில் வெளிவந்த தகவல் தவறானது. வருந்துகிறோம்.


ஆசிரியர்


Friday, March 28, 2025

அறியப்படா ராமாயணம்.-நாடக உரையாடல்




 மூத்த நடிகர் அசுஸ்தோஷ் ராணா, ராம் ராஜ்ஜியத்தின் ஆசிரியரும் ஆவார், ஹமாரே ராம் நாடகம் அவரது விருது பெற்ற இலக்கியப் படைப்பின் இயல்பான விரிவாக்கமாகும். எனவே, நாடகத்தை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தபோது, ​​புகழ்பெற்ற இலங்கை அரசரான ராவணனை சித்தரிக்க அவர் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. இந்த பாத்திரம், ராமரைப் பற்றிய ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியதாக சொல்கிறார் அவர்/

ராவணனாக நடித்த அனுபவத்தை சொல்லுங்கள்...

 

 

இது எனது விருப்பப் பட்டியலில் இருந்தது. இந்த கண்டுபிடிப்பு -   ராவணனாக இருந்தாலும் நீங்கள்  ராமனும் கூட - மாற்றத்துகான பயணமாகும். இதை ராவண்ன் மூலம் உண்மையிலேயே உணர முடியும். அவர் ஜோதிடர் மற்றும் ஆயுர்வேத நிபுணர் மட்டுமல்லர், சஸ்திரம் (ஆயுதம்) மற்றும் சாஸ்திரம் (புராணம்) இரண்டிலும் தேர்ச்சி பெற்று,    சிவபெருமானின் பக்தியுள்ள சீடராக இருந்தார், மேலும் அவர் விரும்பிய எதையும் அடையும் திறனைக் கொண்டிருந்தார். ராமரும் ராவணனும் எதிரிகளாக இருந்தாலும், அவர்களின் கதாபாத்திரங்களின் கருணையும் வலிமையும் அவர்களுக்கிடையேயான இயக்கவியலை சுவாரஸ்யப்படுத்துகின்றன


 

 ஒரே ஆண்டில் 200 காட்சிகள் நடத்தியிருக்கிறீர்கள்

இந்த நிகழ்ச்சியின் வெற்றி என்ன? 


மிகப்பெரிய காரணம், ராமாயணத்திலிருந்து அதிகம் அறியப்படாத கதைகளை நாங்கள் இணைத்திருப்பதுதான். வால்மீகி, துளசிதாசர், கம்பன் மற்றும் பலரால் இக்காவியத்தைப் பற்றி அதிகம் எழுதப்பட்டிருந்தாலும், எங்கள் நாடகம் சொல்லப்படாத, ஆராயப்படாத   கதைகளில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, ராமர் இராவணனை ராமேஸ்வரத்தில் ஒரு பூஜை செய்ய அழைக்கும் கதை. இந்த பூஜைக்குப் பின்னால் இருந்த காரணம் ராமரின் இலங்கையைக் கைப்பற்றும் விருப்பம் என்றாலும், ராமரின் விருப்பத்தை நிறைவேற்ற ராவணன் அதில் பங்கேற்க ஒப்புக்கொள்கிறார். அதேபோல், பெரும்பாலான மக்கள் சூர்ப்பனகையின் கதையை அறிந்து இருந்தாலும்,  ராவணன் கொன்ற அவரது கணவர் வித்யுத்ஜிஹ்வாவைப் பற்றி மிகச் சிலருக்குத்தான் தெரியும். நாடகம் உங்களுக்கு சிந்தனைக்கு உணவளிக்கிறது, மேலும் பல யோசனைகள் மற்றும் பாடங்களை நம் வாழ்வில் பயன்படுத்தலாம்.





ராவணன் ஒரு பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரம், சிலரால் ஒரு அரக்க ராஜாவாகவும், மற்றவர்கள் ஒரு அறிஞர் மற்றும் சிவபெருமானின் பக்தியுள்ள சீடராகவும் பார்க்கப்படுகிறார். இந்த சிக்கலான நபர் மக்களின் பல்வேறு விளக்கங்களுடன் எவ்வாறு ஒத்துப்போகிறார்?


நாடகத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மக்கள் ராவணனின் கதாபாத்திரத்தை விரும்புகின்றனர், மேலும் பலர் அவரை தவறாகப் புரிந்து கொண்டதாக உணர்கிறார்கள். ராமர் உண்மையிலேயே கடவுள் என்றால், நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ளும்போது ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். ராமர் தனது சொந்த உயரத்தைக் குறைத்துக்கொள்ளாமல்  ராவணனின் கதாபாத்திரத்தை உயர்த்துகிறார். தென்னிந்தியாவின் சிந்தனை செயல்முறை வட இந்தியாவிலும் பரவலாக பாராட்டப்பட்டுள்ளது. இது பெரிய மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும்  பெரிய மனிதர்கள்ஆக்குகிறார்கள் என்பதைக் காண்பிப்பதாகும்.   யாரையும் இழிவுபடுத்தாத கதாபாத்திரங்களையும் கதைகளையும் எவ்வாறு உருவாக்குவது என்பது எழுத்தில் ஒரு முக்கியமான பாடம் என்று   நம்புகிறேன் -


 

தற்போதைய காலத்தில் ராமாயணத்தின் பொருத்தம் என்ன?


ராமர் மற்றும் ராவணனின் கதை நமக்குள் நடக்கும் போரை பிரதிபலிக்கிறது - நேர்மறை ஆற்றல் மற்றும் எதிர்மறை ஆற்றல். உண்மையான மோதல் நமக்குள்ளேதான்உள்ளது, அதைக் கட்டுப்படுத்துவது நம் கையில்தான் உள்ளது. நம் புலன்களைக் கட்டுப்படுத்தினால், நாம் ராமனைப் போல ஆகிவிடுகிறோம். இல்லையென்றால், நாம் ராவணனைப் போல முடிவடைகிறோம். இதுதான் முக்கியப் பாடம்: ஒரு சாதகமற்ற சூழ்நிலையை எவ்வாறு சாதகமாக மாற்றுவது? பெரும்பாலான மக்கள் சிந்திக்காமல் சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள், ஆனால் இந்த நாடகம் நாம் எவ்வாறு ஞானத்துடன் எதிர்வினையாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது. இன்றைய உலகம் போர்களால் நிறைந்துள்ளது - அது ஆல் அல்லது பிற சவால்களின் எழுச்சியாக இருந்தாலும் சரி - மேலும் குழப்பத்தில் தெளிவைக் கண்டறிவது எப்படி என்பதற்கான பாடங்களை ராமாயணம் வழங்குகிறது.


 


 

ன்று, ராமர் ஒரு 'அரசியல்மயமாக்கப்பட்ட' நபராக மாறிவிட்டார். அரசியலில் இருந்து கடவுள்களை எவ்வாறு பிரிப்பது?


ராமரின் ஞானத்தையும் அவரது போதனைகளையும் நாம் ஏற்றுக்கொண்டால், நம் வாழ்க்கை இன்னும் நிறைவானதாக இருக்கும். அவரது சரணம் (பாதங்கள்) மற்றும் ஆசாரம் (நடத்தை) இரண்டையும் நாம் வணங்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை. அரசியலுக்கும் அறம்சார் தலைமைக்கும் வித்தியாசம் உள்ளது. ராமரின் அணுகுமுறை சகவாழ்வைப் பற்றியது. அவர் வாலியை விட சுக்ரீவனைத் தேர்ந்தெடுத்தார், சபரியை சந்தித்தார், அனுமனுடன் நெருங்கிய பிணைப்பை உருவாக்கினார், கேவத் மற்றும் நிஷாத்ராஜுடன் நட்பு கொண்டார். கவனிக்கப்படாதவர்களை முன்னணியில் கொண்டு வந்தார்.


ராமர் வாலியைக் கொன்றபோது, ​​கிஷ்கிந்தா ராஜ்யத்தை சுக்ரீவனுக்குக் கொடுத்தார், அதை தனக்காகவோ அல்லது தனது சகோதரனுக்கோ  வைத்துக்கொள்ளவில்லை. இலங்கையை வென்றபோது, ​​இலங்கை மக்கள் தனக்குச் சொந்தமானவர்கள் என்றும், அவர்களை அவர்களே ஆள வேண்டும் என்றும் நம்பியதால், விபீஷணனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். ராமரின் தலைமை நியாயம், ஞானம் மற்றும் மேம்பாடு பற்றியது.






Wednesday, February 26, 2025

நான்காம் வகுப்புப் படித்தவர் நான்கு மொழி அகராதி படைத்தார்



ஒரு அகராதியைத் தொகுத்தல் என்பது கடினமான பணியாகும், இது பல வருட ஆராய்ச்சி, மொழியியல் நிபுணத்துவம் மற்றும் துல்லியமான   அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கோருகிறது.  கேரளாவின் தலசேரியை பூர்வீகமாகக் கொண்ட  86 வயதான ஞாட் யெலா ஸ்ரீதரன், இதை சாதித்துள்ளார். 

இவர் நான்காம் வகுப்பில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர் இதை எல்லாம்  மீறி இந்த அசாதாரண சாதனையை நிகழ்த்தியுள்ளார்
. 2020 இல், அவர் நான்கு திராவிட மொழிகளின் அகராதியான சதுர் திராவிட பாஷா நிகண்டுவை வெளியிட்டார்.


மொழியியல்  துறைக்கு  அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என்றாலும்   மாநில அரசு அவரது முயற்சிகளை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. கேரள பாஷா நிறுவனம் 2022 இல் அகராதியை மீண்டும் வெளியிட்ட போதிலும், ஸ்ரீதரனுக்கு இன்னும் எந்த ராயல்டியும் கிடைக்கவில்லை. பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் அவரை கௌரவித்திருந்தாலும், அவர் இன்னும் தனது சொந்த மாநிலத்திலிருந்து அதிகாரப்பூர்வ அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறார்.

"நான் அகராதியை தொகுக்க 40 ஆண்டுகள் செலவிட்டேன்," என்கிறார் ஸ்ரீதரன். "நான் கர்நாடகா மற்றும் ஆந்திரா  சென்று, மொழிகளைப் படிக்க அங்கு பல மாதங்கள் செலவிட்டேன். நெருங்கிய நண்பர்கள் உட்பட பலர் என்னை ஊக்கப்படுத்தவில்லை, அகராதி தொகுப்பு அறிஞர்களுக்கான பணி என்று வலியுறுத்தினர். நான் ஒரு அறிஞராக இல்லாமல் இருக்கலாம். எனக்கு முனைவர் பட்டம் இல்லாமல் இருக்கலாம். ஆம், நான் நான்காம் வகுப்பில் பாதியிலேயே நின்றுவிட்டேன். ஆனால் எனக்கு மொழிகள் பிடிக்கும். அவற்றைக் கற்க பல வருடங்களை அர்ப்பணித்தேன்,  ," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.



பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஸ்ரீதரன் பீடி சுருட்டுப்பவராக  பணியாற்றினார்.

CPM  இன் குழந்தைகள் பிரிவில் இருந்த காலத்தில்தான்  மொழிகள் மீதான அவரது ஆர்வம் தொடங்கியது.   அங்கு அவர் மலையாளம் எழுதக் கற்றுக்கொண்டார். பின்னர், பாலக்காட்டில் பணிபுரியும் போது, ​​அவர் தமிழ் படிக்கவும் பேசவும் கற்றுக்கொண்டார்.

நான்கு திராவிட மொழிகளிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அவரது ஆசை பாலக்காட்டில்தான் வேரூன்றியது.  

 "நான் தமிழ் பாடப்புத்தகங்களைப் படித்து, மொழியை நன்கு கற்றுக்கொண்டேன்.   தமிழுடன் சேர்ந்து, பிற திராவிட மொழிகளைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ஒரு பாடம்  வலியுறுத்தியது.

தமிழர்கள் தங்கள் மொழியில் மிகுந்த பெருமை கொள்கிறார்கள், மேலும் அவர்கள்தான் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வாதிடுபவர்கள். அதே நேரத்தில், மலையாளத்தில் உண்மையான பெருமை பிற திராவிட மொழிகளைப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது    என்று வாதிட்ட டாக்டர் K.N  எழுத்தச்சனின் ஒரு கட்டுரையைப் படித்தேன். அதுதான்  என்னைத் தட்டி எழுப்பியது.  தெலுங்கு மற்றும் கன்னடத்தையும் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

1980களில், திராவிட மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை ஸ்ரீதரன் மீண்டும் உணர்ந்தார், அகராதியை உருவாக்க இது ஊக்கமளித்தது.

 இருப்பினும், சுய சந்தேகம் அவரைத் தடுத்து நிறுத்தியது. "நான்காம் வகுப்பில் பாதியில் நின்ற ஒருவரின் தாழ்வு மனப்பான்மை என் படைப்புகளைப் பகிர்ந்து கொள்வதைத் தடுத்தது. என் நண்பர்கள் இறுதியில் அதைக் கண்டுபிடித்தபோது, ​​நான் பயந்தது போலவே அவர்கள் என்னை அதைரியப்படுத்தினர். ஆனால் செய்தித்தாள்கள் எனது நோக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது, ​​நான் தொடர்ந்து முயற்சி செய்ய முடிவு செய்தேன்," என்று அவர் கூறினார்.

அகராதியை வெளியிடுவது ஒரு கடினமான போராட்டமாக மாறியது. அவருக்கு முறையான கல்வி இல்லாததை அறிந்த பிறகு, வெளியீட்டாளர்கள் அவரது கையெழுத்துப் பிரதியை நிராகரித்தனர். "நான் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன் என்பதை உணர்ந்தபோது, ​​ஒரு புகழ்பெற்ற பதிப்பகத்தின் ஆசிரியரின் முகத்தை நான் இன்னும் நினைவில் கொள்கிறேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

இறுதியில், 2020 ஆம் ஆண்டில், சதுர் திராவிட பாஷா நிகண்டு கேரள மூத்த குடிமக்கள் மன்றத்தால் வெளியிடப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள் 500 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அப்போதைய தலைமைச் செயலாளர் கே. ஜெயக்குமாரின் தலையீட்டைத் தொடர்ந்து, கேரள பாஷா நிறுவனம் அகராதியை மீண்டும் வெளியிட்டது, இது நூல் பலரிடம் சென்று சேர்வதை உறுதி செய்தது.

 
ஸ்ரீதரனின் திராவிட மொழிகள் மீதான வாழ்நாள்  ஆர்வம் கடும் செலவு வைத்தது. "நான் ஆராய்ச்சிக்காக லட்சக்கணக்கில் செலவிட்டேன், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்குச் சென்று மொழிகளில் மூழ்கினேன். இந்தப் படைப்பு எனக்கு எதையும் ஈடாகத் தரவில்லை. என் குடும்பம் நிதி ரீதியாகப் போராடியது, குறிப்பாக என் குழந்தைகள் படிக்கும் போது. நான்  ஒருவன்தான் எங்கள்குடும்பத்துக்கு   வருமானம் ஈட்டும் ஒரே  நபர். ஆனால் என் மனைவி புகார்கள் இல்லாமல் வீட்டை நிர்வகித்தாள். நான் ஏன் வேலை செய்யாமல் எழுதுகிறேன் என்று அவள் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை," என்று அவர் கூறினார்.

அவரது கதை நந்தன் இயக்கிய தேசிய விருது பெற்ற ஆவணப்படமான  Dreaming of words இல்  இடம்பெற்றது.



Friday, January 17, 2025

உடனுறை இடாகினி- வாசிப்பு அனுபவம்


மருத்துவர்கள், ஓவியர்கள், மன்னர்கள் என பலரைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.. இப்படி இன்னொருவராக மாறி அவரவர்கள் கோணத்தில் எழுதுவது ஒரு கலை. அவ்வளவு ஏன் .. பெண்ணாக மாறி அவள் உணர்வுகளை சிறப்பாக எழுதும் ஆண்கள் உண்டு,


இருந்தாலும் ஒரு பெண்ணே அவள் உணர்வுகளை எழுதினால்  கலைச்செல்வத்துக்கு அது ஒரு கூடுதல் சேர்க்கை.. ஒரு டாக்டர் அல்லது படைவீரர் அல்லது முதல்வர் எழுத்தாளர்களாக இருந்து அவரவர்கள் கேரக்டர்களை எழுதில் புதிதாக ஒரு கோணம் கிடைக்கலாம்.

அந்த வகையில் இணையப் புரட்சியின் விளைவாக புதிதாக எழுத்தாளர்கள் உருவானபோது பெரியதொரு எதிர்பார்ப்பு இருந்தது.


மென்பொருள், மெக்கானிக்கல், மின்னியல், மின்னணுவியல், வியாபாரம் என நூற்றுக்கணக்கான துறைகளில் இருந்து  பல்வேறு ஊர்கள், மாநிலங்கள், தேசங்களில் வாழும் எழுத்தாளர்கள் உருவானபோது,  பல்வேறு களங்கள் பதிவாகும் என்றொரு இனிய எதிர்பார்ப்பு இருந்தது..

அது 20% நிறைவேறியது என்றாலும் பலர் வழக்கமான உருட்டுகள்தான்.


அண்டார்டிக்காவில் வாழ்ந்தாலும் தமிழக அரசியலும்,  தமிழக பிரச்சனைகளும்தான் கருப்பொருள். சிலர் இந்த எல்லைகளில் சிக்காமல் மானுடம் நோக்கிப் பேசுவதும் உண்டு

இதில் தவறு கிடையாது, ஆனால் பிரத்தியேக அடையாளம் மிஸ் ஆனது.


மஞ்சுநாத் அவர்களின் உடனுறை இடாகினி சிறுகதைத் தொகுப்பு இந்த விதத்தில் ஓர் அற்புதம்

அவரால் மட்டுமே எழுத முடியக்கூடிய களங்கள்.. மருத்துவம், இமயலைப்பயணம் என அவரது பிரத்தியேக அனுபவங்கள் கதைகளாகியுள்ள என்பதால், வேறு யாரையும் நினைவூட்டாத அற்புதமான வாசிப்பு அனுபவம்..

இதில் பின்வரும் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.


உதிரும் உடல்

சுயத்தின் மாயப்பிம்பம்


திருவுருத்தி

ஹெப்பாவு

கடைசி நூலகம்


பிரம்ம கமலம்


உயிர் - உடல் - உணர்வு


கரிக்குருவி நூறு

இசிவு

உடனுறை இடாகினி


நிரல் நிறை


உயர்வு நவிற்சி


இவற்றில்  உதிரும் உடல் மற்றும் உயிர் - உடல் - உணர்வு ஆகிய கதைகள் யதார்த்தவாதக் கதைகள் எனலாம்.  இசிவு கதை ஓரளவு இயல்புவாதத்தன்மை கொண்டது. மற்ற அனைத்துக் கதைகளும் குறியீடுகளால் நிரம்பு நம்மை மீண்டும் மீண்டும் படிக்க வைத்து ஒரு வித தியான அனுபவத்தை தருகின்றன.



ஒரு ஜென் குரு மரணப் படுக்கையில் இருந்தார். அவரது இறுதி வாசகம் என்னவாக இருக்கும் என பலரும் ஆர்வமாய்க் காத்திருந்தனர்

அவர் கடைசியாக ஒரு ரொட்டித் துண்டு உண்டு கொண்டிருந்தார்.. “ ரொட்டி வெகு இனிமை” என்றார். அவர் உயிர் பிரிந்தது.. அதுதான் அவரது கடைசி வார்த்தை.

அது போன்ற ஒரு அதிர்வை ஏற்படுத்தியது ஒரு கதையின் இந்தக் கடைசி வரி.


திருலோக்கி வெண்ணிறப் பொத்தானைத் தன் உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டான். செவிலியரிடம் “இங்க லெமன் டீ எங்க கிடைக்கும் சிஸ்டர்?" என்றான்.


கதையின் கடைசி வரி என்றல்ல... ஒரு பத்தியின் கடைசி வரிகூட ஒரு ஹைக்கூ கடைசி வரி ட்விஸ்ட்டுடன் இருப்பது இத்தொகுப்பு முழுக்க ரசிக்க வைக்கிறது


உதாரணமாக..



இமயமலை சிதடிப்பூச்சிகள் வித்தியாசமானவை. ஆனந்தக் கூக்குரல் தனது இணைக்கான அழைப்பொலி என்றாலும் கூடவே தனது பதினேழு ஆண்டுகால மௌனத்தின் அனுபவங்களையும் சேர்த்தே கட்டுடைக்கின்றன. பெண் சிதடிப்பூச்சி வெளியிடும் முட்டைகள் யாவும் ஒன்றரை மாதத்தில் பொரிந்துவிடுகின்றன. ஆனாலும் தரையில் விழும் இளம் பூச்சிகள் மண்ணுக்குள் நுழைந்து மரத்தின் வேர் முனைகளில் தங்கி தனக்கான உணவை உண்டபடி வெளியே வராமல் கிட்டத்தட்ட பதிமூன்றிலிருந்து பதினெழு ஆண்டுகள் வரை மௌனத்தில் வாழ்கின்றன.


பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு மௌனவிரதம் களையும் சிதடிப்பூச்சிகள் தங்களது சக்திகள் முழுவதையும் திரட்டி ஒரு வாரம் முழுவதும் ஆத்ம கானத்தை இடைவிடாது இசைப்பதில் மும்முரமாகின்றன. கூடவே சந்ததிகள் உருவாக்கத்திற்கான செயல்களிலும் வேகமாக ஈடுபடுகின்றன. வாரத்தின் இறுதியில் புகார்கள் இன்றி இறந்தும் போகின்றன.


என்னிடம் ஏதேனும் புகார்கள் இருக்கின்றனவா?




இதில் உள்ள கதைகள் சில ஒன்றையொன்று நிரப்புவதாக முழுமை செய்வதாக இருப்பது சிறப்பு


உதாரணமாக பாலியல் வன்முறை குறித்துப்பேசும்  ஹெப்பாவு

, கரிக்குருவி நூறு ஆகிய கதைகள் வாழ்வின் முழுமையையும் காதலையும் பேசும் நிரல் நிறை உயர்வு நவிற்சி ஆகியவை என சொல்லலாம். அதுபோல கண்ணுக்குத் தெரியாத விசைகளைப் பற்றிப் பேசும் இரு கதைகள் திருவுருத்தி மற்றும் உடனுறை இடாகினி ஆகியவற்றை சென்ற ஆண்டு ( 2024) நான் படித்த கதைகளில் டாப் டென் என்ற இடத்தில் வைப்பேன். அந்த அளவுக்கு ஆழமான கதைகள். நம்முள் உடன் உறைவது எது  அதனால் ஏற்படும் விளைவுகள் என இரண்டு கதைகளும் முற்றிலும் வேறுபட்ட நடைகளில் கருப்பொருள்களில் சொல்லிச் செல்வதை அற்புதம் என்றுதான் சொல்ல முடியும்.


கடைசி நூலகம் கதையைப் படிக்கும்போது முரகாமி கதை போல இருந்தது.. என்ன ஒன்று  முரகாமி கதைகள் உள்ளீடற்று இருக்கும்.. இக்கதை முரகாமி அளிக்கும் விசித்திர அனுபவத்தை ஆழமான மனித உணர்வுகளுடன் சேர்த்து அளிக்கிறது.


சுயத்தின் மாயப்பிம்பம் மற்றும் பிரம்ம கமலம் ஆகிய கதைகளையும் சேர்த்துப் படிக்கும்போது அதுதரும் திறப்பு அற்புதம்.


கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்


ரசித்த சில வரிகள்


 தனஸ்ரீ ராகம்போல் சுயத்தின் ஆழத்திற்கும் விளிம்பிற்கும் மாறி மாறிப் பயணித்துக்கொண்டிருந்தன.


இன்றைக்கு நாள் முழுவதும் சூரியனைக் காணமுடியவில்லை என்றாலும் மங்கிய வெளிச்சம் சித்திரத்தில் உறைந்திருக்கும் வண்ணம்போல் அசைவில்லாத தியானத்திலிருந்தது. காற்றில் கடுங்குளிர் அதிகம் என்பதை மூக்கிலும் கண்களிலும் வழியும் நீர் அறிவுறுத்திக்கொண்டிருந்தது. சிகரங்களில் இருள் கவிழ நேரமாகலாம்



"உஜ்ஜயினி மகாகாளேஸ்வரரைப் பார்க்கப்போ பிரம்மச்சரியம் தீட்சையை அங்கதான் வாங்கப்போறேன்.


"வேணாம் தம்பி, வீட்டுக்குப் போ. கங்கா தண் கொடுத்துட்டு சந்தோஷமா வேலையைத் தேடு. ஏதோ ஒன் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். நிதானமாயி நிச்சயம் ஏதொவொன்னைக் கத்துக்கலாம். உனக்குக் கொஞ் விபரம் தெரியுது. இருந்தாலும் நீ நினைக்கிற மாதிரி சாதார கிடையாது. உஜ்ஜயினி பக்கம் மட்டும் போயிடாதே. ஒருமு உள்ள நுழைஞ்சிட்ட நீ வெளியே போகவே முடியாது. விடமாட்டாங்க. நீ எங்க தப்பிச்சுப் போனாலும் தே தூக்கிடுவாங்க."



 


 


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா